செவ்வாய், 29 டிசம்பர், 2009

எனக்கு 18 உனக்கு 20

அப்பாடா, ஊருக்கு கிளம்பியாச்சு. ரயிலை சரியா எடுத்திருவான், ஒரு வழியா கிண்டியில் மின்சார ரயிலை புடிச்சு உட்கார்ந்தாச்சு. 6 மாசத்துக்கு அப்புறம் முதல் வருட எக்ஸாம் முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறேன். எல்லா எக்ஸாமும் ரொம்பவே கஷ்டம். இத்தனைக்கும் அந்த கெமிஸ்ட்ரி இருக்கே (படிச்சாதானே),.. ராத்திரி முழுக்க கண் முழிச்சு 5-6 புக் புரட்டி பார்த்து நோட்ஸ் எடுத்து, காலைல ஹால்ல போய் உட்கார்ந்தா 20 பிட்டுல ரெண்டுதான் வருது. அந்த பிட்டு எங்கே இருக்குன்னு index பிட்டுல பார்த்து, அதை தேடி எடுத்து, அதை பேப்பர்க்கடியில மறைச்சு வச்சு, பயந்து பயந்து காப்பியடிச்சு ஸ்ஸ்ஸ்ஸ்,.. போதுமடா சாமி கடைசி டைம்ல கஷ்டப்பட்டது. அடுத்த எஃஸாமுக்காவது ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரெடி பண்ணிரணும்,.. பேப்பர் சேஸ் பண்ண ஒரு சரியான ஆளை,.எக்மோர் வந்துவிட்டிருந்தது.



ம்ம்ம்ம்,.. பார்க்கலாம்,.ஃபிகர் ஏதாச்சும் நம்ம பக்கத்துல உட்காருதான்னு. அந்த "எனக்கு 20 உனக்கு 18" படம் பார்த்ததிலிருந்து மனசுல ஒரு ஆசை, ஒரு ஏக்கம் ரயில்ல நம்ம பக்கத்துல த்ரிஷா மாதிரி யாராச்சும் உட்கார்லேனாலும் பரவாயில்லை. அந்த பட செகண்ட் ஹீரோயின் ஷ்ரேயா மாதிரியாச்சும் ஒரு ஆள் பக்கத்துல உட்காரணும். த்ரிலிங்காக passangers chart பாத்தேன். ஆஆஆஆஆஆஆ,.. ஒண்ணுமே இல்ல,.. என்ன பண்றது,. பக்கத்துல பாத்தா எல்லாம் 35 வயசுல இருக்குற பொம்பளைங்களா இருக்காங்க, ம்ம்ம்ம். முழுசாக பார்த்தேன். 23 வது சீட்டில் வைசாலி, வயது 20, திருச்சி என போட்டிருந்தது,.ம்ம்ம்க்கும் அதுவும் அக்காவா?? சரி,.. நொந்து போய் சீட்டிற்கு போனேன்.



பெரும் அதிர்ச்சி. சும்மா தேவதை மாதிரி தகதகன்னு,. அப்படியே ஷாக்காய்ட்டேன்,. அவள் அழகில் மட்டுமல்ல, என் சீட்டில் வேறு உட்கார்ந்து இருந்தாள். கடவுளே, எனக்கு ஏற்கனவே பொண்ணுங்கள்ட்ட பேச வராது,..(அட நம்புக்கப்பா,...),.. இவள்ட்ட இங்கிலீஸ்ல வேற பேசணும் போல இருக்கே,..ம்ம்ம்ம் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே
"நீங்க இங்க உட்கார்ந்துக்கிறீங்களா?,. நான் முன்னாடியே இறங்கணும்"
"வேர்,. (அதாம்பா where?)
"jdjsc ncnnclnci ncojcnpjc nicbincn nicnicn oijdnbdvbbzzjcbb znxbcubdc"
"பர்டன்" (burden இல்ல pardon )
"ஸ்ரீ ரங்கம்"
டேய் உனக்கு தேவையா? மனசிற்குள் கோபம் வந்தாலும் அவள் அழகில் அமைதியா போய்ட்டேன்.



ட்ரெய்ன் செங்கல்பட்டை ஒட்டி வந்து கொண்டி இருந்தது. செங்கல்பட்டு ஏரியின் நீர் வாசனையை தூக்கி சாப்பிடுவதுபோல் ஒரு வாசனை. ஆஆஆ,.. ஒரு வெண்ணெய் தயிர் சாதம் சாப்பிடுகிறது! (கவனிக்க ஆச்சர்யகுறி). கூட மசால்வடை வேறு, எனக்கு நல்லா பசியை கிளப்பிவிட்டுறுச்சு. பசியினால் என் கவனம் வெண்ணெயிலிருந்து தயிர்சாதத்திற்கு மாறியதை கவனித்துவிட்டாள் போல,..

"சாப்பிடுறீங்களா???" (கவனிக்க சாப்பிடுங்க இல்ல, சாப்பிடுறீங்களா???)
"இல்ல செங்கல்பட்டில்தான் எப்பவும் சாப்பிடுவேன்,.."( எப்பூடி???)
எழுந்தேன்,.
"எக்ஸ்கிஸ்மீ"
",...."
"இந்த வாட்டர்கேன்ல தண்ணீ புடிச்சு தர்ரீங்களா"
இறங்கி எனக்கு ஒரு புளி சாதம் வாங்கிவிட்டு, அவளிற்கு தண்ணீர் பிடித்துவிட்டு மேலே ஏற வண்டி நகர ஆரம்பித்திருந்தது.
"தாங்க்ஸ்"
இடத்தில் அமர்ந்தேன். பொட்டலத்தை பிரித்தேன். பக்கத்தில் இருந்த மசால் வடையின் வாசத்தில் புளி சாதம் சாப்பிட ஆரம்பித்தேன்.
"என்ன இது, எலுமிச்சை சாதமா?" (அடிப்பாவி, மஞ்சளாயிருக்கிற எல்லாமே எழுமிச்சை சாதமா?)
"இல்ல, புளி சாதம்"
"எவ்ளோ"
"5 ரூபாய்"
"5 ரூபாய்க்கு சாதமெல்லாம் கிடைக்கிதா?" (நற,. நற)
"வடை சாப்பிடுங்க"
"இல்ல இருக்கட்டும்"
"பரவாயில்ல, எப்டி தனியா சாதம் மட்டும் சாப்பிடுவீங்க"
"இல்ல்ல,. இருக்கட்டும்"
"அட சாப்பிடுங்க"
வடையில் பாதி வாயில் போய்விட்டிருந்தது,..


கொஞ்சம் கொஞ்சமாக சம்பாஷணைகள் ஆரம்பித்து விட்டுருந்தன. நிறைய பேசினாள். உண்மையில் அவளிடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. விழுப்புரம் வந்துவிட்டது.

"ஏதும் வேணுமா?"
"எனக்கு ஒரு காபி"
"வேற?
"இல்ல, போதும்"
நான் போய் காபியும், சூடாய் போட்ட மசால்வடையும் வாங்கிவந்தேன்.

"என்ன ஜோதி, நான் சாப்பிடும்போது தந்த வடைக்கு கணக்கு தீர்க்குறீயா?"
"ச்சீ,.. சூடா இருந்துச்சு, அதான் வாங்கிட்டு வந்தேன், வேணாம்னா, பரவாயில்ல, நானே சாப்பிட்டுறேன்"
"அடப்பாவி, ஒரு பேச்சுக்கு சொன்னா நீயே அமுக்குறீயா, கொண்டா"

எங்கள் பேச்சுக்களை, செயல்களை பக்கத்தில் இருப்பவர்கள் கவனிப்பது நன்றாக தெரிந்தது. இருந்தாலும் அது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தொணதொணவென் அவள் பேசும் அழகு, அவளின் அழகை விட எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
ஆனால் அவள் அப்படி, இப்படி நகரவேயில்லை. நகை ஏதாச்சும் வெச்சுருப்பாளோ??
பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன,..

"நீ யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கியா"
"ச்சீ,இல்ல"
"என்னை ராக்கிங்க்ல, இந்த கேள்விதான் கேட்டாங்க"
"ம்ம்"
"ஆனா, பக்கத்துல இருக்கிறவன் இவளயெல்லாம் எவன் லவ் பண்ணுவான்னு வெறுப்பேத்தி அனுப்பி விட்டுட்டான்,.. வெறுப்பாகி அதிலிருந்து எனக்கு அந்த எண்ணமே வர்ரதில்ல"
"ஏன்"
"உனக்கு புரியாது, வேணாம், வேற ஏதாச்சும் பேசு"
பேச்சுக்கள் போய்க்கொண்டே இருந்தன. .

பக்கத்தின் இருப்பவர்களின் காதுகள் எங்களையே கவனிப்பது நன் கு தெரிந்தது. அவள் கண் மூட ஆரம்பித்தாள். நான் அவள் அழகை ரசிக்க ஆரம்பித்தேன். காற்றின் விசையில் அவள் கூந்தல் என் மீது வீசிக்கொண்டு இருந்தது. நான் அவளிடம் சரணடைந்து கொண்டிருந்தேன் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது.



"ஸ்ரீ ரங்கம் வந்திருச்சு"
"ம்ம்ம்ம்"
"வண்டி நிக்கட்டும்"
"என் பேக்கை எடுத்து பிளாட்பாரத்துல தர்ரியா"
"ம்ம்ம்ம். சரி"
எழுந்தாள். ஒரு மாதிரி சாய்ந்தாள்,.முட்டியில் கைவைத்தாள்,..
ஒண்ணும் புரியவில்லை,. சில நொடிகளில்,..
"கடவுளே, இவள் ஊனமா?" எனக்கு நெஞ்சடைத்துவிட்டது. சுதாரித்து விட்டு ப்ளாட்பாரத்தில் பேகை கொடுத்தேன்.அவளிடம் சின்ன புன்முறுவல் கூட இல்லை.

"bye"

மெலே ஏறி ஜன்னலோரம் உட்கார்ந்தேன்.

சூரியன் சாய ஆரம்பித்துவிட்டான். காவிரி ஆறு வற்றிவிட்டிருந்தது.


4 கருத்துகள்:

கலகலப்ரியா சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜோதி... (கதை பெரிய கதையா இருக்கே... வந்து படிக்கறேன் இருங்க..)

jothi சொன்னது…

வாங்க ப்ரியா,.. இப்ப நீங்க இருக்குற பிஸிக்கு இந்தப் பக்கம் வந்ததே பெருசு,..

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

தொடர்ந்து சிறப்பாய் எழுதுங்கள்,..

கலகலப்ரியா சொன்னது…

நக்கலா...? ம்ம்.. இருக்கட்டு இருக்கட்டு..! கதை மிக மிக அருமை..! எழுத்து நடை மற்றும் கதை..!

jothi சொன்னது…

மிக்க நன்றி ப்ரியா. அதென்னவோ நமக்கு கதை மட்டும் ஒர்க் அவுட் ஆக மாட்டீங்கிது

கருத்துரையிடுக