திங்கள், 11 மே, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கப்படாதவள்

அம்மா இன்று அன்னையர் தினம். எத்தனையோ இதே மே 10, வந்தாலும் இது அன்னையருக்கான தினம் என இப்பொதுதானே தெரிகிறது. மற்றபடி உங்களின் பிறந்த நாள் மட்டுமே முக்கியமானதாக இருந்தது. நீங்கள் எனக்கு பள்ளிக்கு கூட்டிச்செல்லும் போதோ, என்னுடன் பிறந்த 5 பேரையும் டாக்டராகவும், பொறியாளராகவும் ஆக்கிய போதோ, நான் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்த போதோ வராத மதிப்பு, என் மனைவி பிரசவ வலியில் துடிக்கும் போதுதானே வருகிறது. நான் ஒரு குழந்தையை வளர்க்கவே இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ளும் போது நீங்கள் ஆறு குழந்தைகளை வளர்க்க கஷ்டப்ப்ட்டு இருப்பீர்கள்? எந்த குழந்தைக்கும் தனி பிரியம் காட்டாமல் உங்கள் கண்ணில் "Electronic balance"ல் வைத்தது போல் உணவை பகிர்ந்துகொடுக்கும் போது என் கண்கள் "Periscope" போல்தானே மற்ற தட்டுக்களை பார்த்துக்கொண்டிருந்து? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு எண்ணம்? நம் அரசும் ஒரு தாயயை போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அம்மா உன் ஆசையில் எதை நான் நிறை வேற்றினேன்?. மாவட்டத்தில் முதல் இடம் நான் வாங்க ஆசைப்பட்டாய், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன். என்னை டாக்டராக ஆசைப் பட்டாய், நான் பொறியல் படித்தேன். என்னை நண்பர்களுடன் ஊர் சுற்றாதே என்று சொன்னாய். நண்பர்களுடன் ஊர் ஊராய் சுற்றினேன். காதலிக்காதே என்றாய், காதலித்தேன் என்னால், ஊரில் எல்லோரிடமும் அவமானப்பட்டாய். உனக்கென்று என்ன கேட்டாய் இது வரை?. உனக்காக என்ன செய்து விட்டேன் நான், இந்த அன்னையர் தின கடிதத்தை தவிர?

நான் செருப்பில்லாமல் நடந்த போது உன் செருப்பை எனக்கு கொடுத்து என் கால் சூட்டை நீ வாங்கினாய், கஷ்டப்போது எங்களுக்கு சோறுட்டி நீ தண்ணீர் குடித்து தூங்கினாய், திருவிழாவில் நான் காணாமல் போன போது எனக்காக நீ மொட்டை அடித்தாய், முதன் முதலில் மண்ணெண்ணெய் pump stove வாங்கிய போது எங்கள் அனைவரையும் வெளியில் அனுப்பி நீ மட்டும் உள்ளே இருந்து பற்ற வைத்தாய்.அம்மா, எந்த முட்டாள் சொன்னது கடவுள் இல்லை என்று???

என் அப்பாவையும் விட்டு தராமல், எங்களுக்கும் சோறு ஆக்கிப்போட்டு, ஆசிரிய வேலைக்கு கிளம்பி பாடம் முடித்துவிட்டு, பின் வீட்டிற்கு வந்து எங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து விட்டு, எல்லோருக்கும் மீண்டும் சோறக்கி போட்டு, பிறகு தூங்க வைத்து,.யப்பப்பா,.. எழுதுகிற எனக்கே இப்படி வலி இருக்கும் போது வேலை செய்த உனக்கு எப்படி இருந்திருக்கும்? என் மனைவியின் அன்றாட வலியை பார்க்கும் போதுதானே நீ எங்கள் ஆறு பேரையும் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய் என தெரிகிறது. இது வரை நீ ஆசைப்பட்டதை எதுவும் நான் நிறவெற்றியது இல்லை. இதற்கு மேல் என்னிடம் கேட்கப் போவதுமில்லை.ஆனால் இந்த ஒரே ஒரு முள் மட்டும் குத்திக் கொண்டே இருக்கிறது. உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போய்கிறேன்?

6 கருத்துகள்:

Subha சொன்னது…

உருக்கமான வரிகள்!

jothi சொன்னது…

ரொம்ப நன்றி சுபா.அடிக்கடி இந்த ஏழையின் வலைப்பக்க குடிசைக்கு வந்து விட்டு போங்கள்.

ஆகாய நதி சொன்னது…

உணர்வுப் பூர்வமான பதிவு!
-சுபா(நானும் :))

jothi சொன்னது…

நன்றி ஆகாய நதி.

கலகலப்ரியா சொன்னது…

தாய்க்குக் கைமாறு செய்யக் கிளம்பினால் நாம் எழுபது பிறவி எடுத்தாலும் முடியாது.. ஆனாலும்.. இவ்வளவும் பண்ண அவளுக்கு கொஞ்சமே கொஞ்சமாவது ஏதாவது பண்ண முடியுமாங்கிற ஏக்கம் தவிர்க்க முடியாதுதான்.. இந்தக் காலத்தில இந்த முள்ளு நீக்க முடியாத நிரந்தர முள்ளுங்க.. நெருடிக்கிட்டே இருக்கும்..

jothi சொன்னது…

நன்றி கலகலப்பிரியா,.. நீங்கள் சொல்வது உண்மைதான்,.

கருத்துரையிடுக