சனி, 13 பிப்ரவரி, 2010

கல்யாண ஆல்பம் பார்க்கலாமா?



ம்ம்,.. எல்லாத்தையும் எடுத்து வெச்சாச்சு. அம்மாவிற்கு என ஒன்று, அப்பாவிற்கு, மனைவி, குழந்தை, தம்பி என அனைவருக்கும் கேட்டு விரும்பி சாக்லெட், பிஸ்கட், காபிதூள், ஷூ என எல்லாத்தையும் எடுத்து வெச்சாச்சு. குடும்பத்தை பார்த்து 8 மாதமாய் ஆகிவிட்டதில்லையா.

என் மகன் முன்னை மாதிரி இல்லை. என்னை "web cam" மூலம் நன் கு அடையாளம் கண்டு கொண்டுவிட்டான். மற்ற குழந்தைகள் அவர்கள் தன் தந்தையுடன் போகும் அழகைப் பார்க்கும் போது, பாவம் குழந்தை உள்ளுக்குள்ளேயே பொருமுகிறது.அவன் வயது சிறுவர்களிடம் "அப்பா நாளைக்கு வந்திருவாங்க, நானும் பைக்குள போவேனே" என்று விளக்கம் வேறு. இப்போது தினமும் கேட்கிறானாம் "அப்பா நாளைக்கு வந்திருவாங்கல்ல?? சில நேரங்களில் தனித்து இருக்கும் போது என்ன மொழப்பு என தோணும். வீட்டுக்கடன் கண்முன்னே வந்து நிற்கும் போது எல்லாம் போய்விடும்.



குழந்தை ரெண்டு மாதம் இங்கே கத்தாரில்தான் இருந்தான். வீட்டுக்காரம்மா பரிட்சை இருக்குன்னு சென்னை போய்ட்டாங்க,.. அதனால மறு படியும் வனவாசம். சில நேரங்களில் கணிப்பொறியில் உள்ள அவன் வீடியோக்களை பார்த்து ரசிப்பது உண்டு. சில நேரங்களில் அதையும் தாண்டி தனிமை வாட்டும். பீரோவை திறந்து அவன் மடித்து வைத்த துணிகளை கலைத்துப்போட்டு மறுபடியும் அடுக்குவேன். அப்பனுக்கே உள்ள இந்த தனிமை வேதனை நினைத்துப் பார்ப்பது கடினம். அதைவிட மனைவியைவிட்டு பிரிந்து இருக்கிற சோகம். அதை எழுத்தில் கொண்டுவருகிற அளவிற்கு எனக்கு திறமை இல்லை. காலை விமான நிலையத்திற்கு வருகிறேன் என சொல்லி இருக்கிறாள். கண்டிப்பாக மகனையும் தூக்கிக் கொண்டு வருவாள். பார்க்கலாம், எப்படி தாவி வருகிறான் என்று. என் மனைவி கூட போன வருடத்திற்கு நான் வாங்கி தந்த ரோஸ் நிற சல்வார் போட்டு வருகிறேன் என சொல்லி இருக்காள். அவளையும் பார்க்க வேண்டும். உடம்பு ரொம்ப இளைத்துவிட்டதாக மாமியார் சொன்னார்கள். என்னை பார்க்காமல் இருக்கிற காரணமாய் கூட இருக்கலாம் (காமெடிதான் ஆனால் ஒரு வேளை உண்மையாக கூட இருக்கலாம்) .

ம்ம்ம்ம்,. எப்படியோ ஓடிவிட்டது ஒரு வருடம். ஆனால் இப்படி குடும்பத்தைவிட்டு பிரிந்தது இல்லை. எப்படிதான் அமெரிக்கா போகிற நண்பர்கள் மூணு வருடம், நாலு வருடம் இப்படி கழித்து வருகிறார்கள் என தெரியவில்லை. கொடுமையடா சாமி. வெளி நாட்டு வாழ்க்கை சுகமானது இல்லை. சுமையானது.

ஒரு வழியாய் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு விமானத்திற்குள் வந்தாச்சு. விமானத்தில் ஊருக்கு போகிறோம் என நினைத்து உட்கார்ந்திருக்கிற இந்த சுகத்தை வர்ணிக்கமுடியாது.எப்படா ஊர் வந்து சேரும் என இருக்கிறது. விமான பணிப்பெண் விகாரமாய் தெரிகிறாள்,

"விஸ்கி வேணுமா சார்?"

" வேணாம்"


ஸ்கீரினில் ஓடுகிற படம் ஜவ்வாய் இழுக்கிறது.

சீட்டில் உட்காரமுடியவில்லை. பக்கத்திலிருக்கிறவன் செம குறட்டை. ஏற்கனவே எனக்கு ஊருக்கு போற சந்தோசத்துல தூக்கம் வரல, இதுல இவன் வேற,..

ஒரு வழியாய் பத்திரமாய் தரை இறங்கியாச்சு. ஒவ்வொரு முறை விமானம் ஏறும் போதும் இன்ஸூரன்ஸ் பற்றி நினைப்பது வெளி நாட்டு இந்தியர்களுக்கே உரிய வழக்கம். அதில் நானும் விதி விலக்கல்ல,. ஏறும் போதும் இறங்கும் போதும் இன்ஸூரன்ஸ் நினைப்புகள் தவிர்க்க முடியவில்லை. அபச குணம்தான்,. இருந்தாலும் தவிர்க்க முடியாத நினைப்புகள் இவை.

காலை 5 மணி. முதலில் போனால்தான் முதலிலேயே சோதனைகளை முடித்துவிட்டு வரமுடியும். கொஞ்சம் லேட்டாக்கினால் அவ்வளவுதான் கூட்டம் உள்ளே புகுந்துவிடும், அடித்து பிடித்து முடித்துவிட்டேன்.

பாவம், எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து வந்திருப்பார்கள் எனத்தெரியவில்லை. காத்திருப்பார்கள், வெளியே வந்தேன். காணவில்லை. வேறு எங்காவது தேடிக் கொண்டு இருப்பார்களா என தெரியவில்லை. எங்கும் காணோம். போன் பண்ணினால் switch off. இவள் எப்பவுமே இப்படிதான் பேட்டரி சார்ஜ் பண்ணவே மாட்டாள்.

வீட்டிற்கு போன் பண்ணினேன்.

"என்னங்க, வந்திட்டுங்கிளா,.. சாரிங்க, தூங்கிட்டேன்"
"@#%$%$%$ ^%&#^%&"
"தூங்கிட்டேன் சொல்றேன்ல"
"@#%$%$ $%$!%$ %!%$!%4 @#%$%$%$ ^%&#^%&"
டொக்,.. போன் வைக்கப்பட்டு இருந்தது.
கோபம் தலைக்கேறியது.

ஆட்டோவைப் பிடிச்சு உட்கார்ந்தாச்சு. சென்னை காத்து சில்லென்றுதான் இருந்தது. ஆனால் மனசுதான் சூடாக இருந்தது. போய் வச்சிக்குறேன். ரொம்பதான் பண்றா,.. பார்க்கலாம். சண்டைலாம் போடக்கூடாதுன்னுதான் இருந்தேன். என்ன பண்றது. ஒரு வருடத்திற்கு முன்பே பிளான் பண்ணியது. எப்படிதான் தூக்கமோ??

ஆட்டோ கேட்டில் நின்னது. மகனும், அத்தையும் நின்று கொண்டிருந்தார்கள். மகன் என்னைப்பார்த்ததும் தாவி வருவான் என நினைத்தேன். வர வில்லை.
"ப்பா, அம்மா அழுகுறாங்க"
ஸ்ஸ்ஸ்,. கிளம்பியாச்சுடா,.. அது எப்படிதான் இப்படி சொல்லிவச்ச மாதிரி அழுகுறாளோ தெரியல, சாவித்திரியெல்லாம் பிச்சை வாங்கணும்..என் லேப்டாப் பையை தூக்க என் மகன் உள்ளே தூக்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். நான் உள்ளே வந்துவிட்டுருந்தேன்.

அழுது முகம் வீங்கியிருந்தது. (அதெப்படிதான் அடிக்காமலேயே வீங்குதோ தெரியல,அதென்னமோ தெரியலை மனைவி அழுகும் போதுதான் சிரிப்பு வந்து தொலைக்கிறது).

" இப்போ எதுக்கு அழுகுற?"
"#@$#% $#%$!# %$#!% $#%$1"
" சரிவிடு, தெரியாம திட்டிட்டேன்"
"@~#$# $%!%$ %^@% !$^!%^ ^%#&#^"
" விடுன்றேன்ல"
"$#!%$#% $#%!^^% %@^%^"
"சரி, ஓகே, நம்ம கல்யாணம் ஆல்பம் பாத்து ரொம்ப நாளாச்சு, பார்க்காலாமா? ?"
",......"

ம்ம்ம்,.. அதெப்படிதான் இந்த பெண்களுக்கு சடாரென சிரிப்பு வருதுன்னே தெரியல,..

சண்டைகள் காதலை நெருக்கமாக்கின்றன.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்,.. (எல்லாரும் எதையாச்சும் காதலிக்கிறாங்கல்ல, அதுக்குதான் எல்லாத்துக்கும்)

நாளைக்கு நாட்டிற்கு கிளம்புகிறேன். இன்னும் ஒரு மாசத்துக்கு நான் லீவுங்க,.. அதனால யாரும் பின்னுட்டம் போடலையேன்னு கோச்சுக்காதிங்க (ஒரு மாசத்திற்கு பதிவுத்துறை தப்பிச்சதுப்பா),..


.

14 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

welcome to back home country!!!!!!!

jothi சொன்னது…

சென்னை வா வா என் கிறது. கத்தார் போ போ என்கிறது.

மிக்க நன்றி ஜெய்லாணி

Unknown சொன்னது…

சே..ரொம்ப சூப்பரா இருக்கு ஜோதி உங்களோட இந்தப் பதிவு ரொம்ப எதார்த்தமா...நேர்மையா...அழகான பதிவு தோழா...ஒரு டைரி படித்தது போல் இருந்துச்சு!!!

நிங்கள் உங்க குடும்பத்தோடு சிலவிடும்...தப்பு தப்பு..வரம் பெற்ற நிமிடங்கள் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்!!!!

jothi சொன்னது…

வாங்க ஆண்டோ,.. மிக்க நன்றி,.. இது வழக்கமான கற்பனைகளில் ஒன்று. காதலர் தினத்திற்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டது.

இதே போல ஜூன் ஊருக்கு வந்தேன். அப்போதும் இதே மாதிரி ஒரு கதை உண்டு. நேரம் இருந்தால் படியுங்கள்.


http://jothi-kannan.blogspot.com/2009/05/blog-post_31.html

jothi சொன்னது…

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆண்டோ

Thenammai Lakshmanan சொன்னது…

வாழ்த்துக்கள் ஜோதி

கலகலப்ரியா சொன்னது…

arumai arumai... nallapadiyaa poittu vanga..!!! sssaba...

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

Good bye,Happy journey.

Joe சொன்னது…

ஜோதி,
உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!

இதையெல்லாமா எழுதுவீங்க-ன்னு இன்னொரு சண்டை வரலையா? ;-)

Your son is so cute!

jothi சொன்னது…

நன்றி தேனம்மை அக்கா

jothi சொன்னது…

நன்றி ப்ரியா, ஒரு லொள்ளு பார்ட்டி ஒழிஞ்சதுன்னுதான இந்த சந்தோசம்?? இருக்கட்டு

jothi சொன்னது…

நன்றிங்க சாந்தி லெட்சுமணன்

jothi சொன்னது…

நன்றி ஜோ,..

இதிலென்ன இருக்கிறது,.. அனைத்தும் கற்பனைதானே,..

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கருத்துரையிடுக